Divine Astrologer

தேதியூர் V.மஹாதேவன்

98417 89483

ம்பி ஐயரும் சாம்புவும் காலையில் வாக்கிங் போக கிளம்பிக் கொண்டு இருந்தனர். வரும் வழியில் கிருஷ்ணசாமியை பார்த்து விட்டு போகலாம் என்று கூறினார் அம்பி ஐயர்.
கிருஷ்ணசாமி வாசல் திண்ணையில் ஏதோ பறிகொடுத்தது போல அமர்ந்து இருந்தார்.
உள்ளே ஒரே சத்தமாக இருந்தது.
என்ன கிருஷ்ணசாமி. . . உள்ளே ஒரே சத்தமாக இருக்கு என்று கேட்டார் சாம்பு.
அது ஒண்ணுமில்லை. . . பெண் பிரஸவமாகி குழந்தையோட வந்து பத்து நாள் ஆரது. மாப்பிள்ளை ஏதோ கோபமா இருக்கார் அதான். . . என்று இழுத்தார்.
சரி . . சரி¢. . . கோபப்படச் சொல்லாதே. கைக்குழந்தையோட இருக்கா. பச்ச உடம்பு. கோபப்பட்டா உடம்புக்கு ஆகாது. பாத்து பக்குவமா எடுத்துச் சொல்லாம வாசல்ல உட்கார்ந்து இருக்கயே. போய் அவாள சமாதானப்படுத்து என்று கூறி இருவரும் கிளம்பினர்.
போகும் வழியில் அம்பி ஐயர் சாம்புவிடம் நான் அப்பவே சொன்னேன், ஜாதகத்த பார்த்து சேர்த்து வைன்னு. கேட்டாத்தானே. பெண்ணுக்கு பையனை பிடிச்சு இருக்குன்னு சேர்த்து வைச்சான். இப்போ வாசல்ல உட்கார்ந்து அழுதுண்டு இருக்கான். என்ன தலையெழுத்து பார் அவனுக்கு.
மாப்பிள்ளை பெண்ணிடத்தில் உங்க அப்பாவை குழந்தைக்கு பெயர் வைக்கும் போது 5 பவுன் நகை போடச் சொல்லு. அப்பத்தான் குழந்தைக்கு பெயர் வைக்க முடியும். இல்லைனா எங்க வீட்டில போய் வெச்சுக்கலாம்.
இங்க ஒன்னும் வைக்க தேவையில்லை என்று கடுமையான வார்த்தைகளால் சொன்னார்.
அவளுக்கு கோபம் வந்தது. “நாங்கள் ஏழைதான். உங்க அளவு பணக்காரர் இல்லை தான். ஆனா உங்களை விட சம்பளம் அதிகம் வாங்குகிறேன் என்று தானே என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணின்டேள்”.
“வாங்கற சம்பளம் பூரா உங்க லோனுக்கும் உங்க குடும்பத்துக்கும் தானே கொட்டி கொடுக்கிறேன். எங்க அப்பா, அம்மாக்கா கொடுக்கிறேன். அப்படி இருக்கும் போது அத போடல, இத போடலன்னு ஏன் எங்க அப்பா அம்மாவை குத்தம் சொல்றேள்” என்றாள்.
“இதோ பாரு இத மாதிரி எல்லாம் பேசாதே இப்படிச் சொன்னாத்தான் அவா போடுவா. பவுன் விக்கிற விலையிலே இப்பயே புடிச்சு சேத்தாத்தான் அதுக்கு சேரும் என்று கூறியவுடன் அவளுக்கு மேலும் கோபம் வந்தது. சரி, நான் சொல்லரத சொல்லிட்டேன் அப்புறம் நீ பார்த்துக்கோ” என்று கூறி கிளம்பினார் மாப்பிள்ளை.
கிருஷ்ணசாமி உள்ளே சென்று இருவரது சண்டையையும் விலக்கி சமாதானப்படுத்தினார்.
இரண்டு நாட்களில் பெயர் வைக்கும் படலம் வந்தது. மாப்பிள்ளை எதிர்பார்த்ததை விட மிக விமரிசையாக செய்தார் கிருஷ்ணசாமி.
ஒரு வாரம் அமைதியாகச் சென்றது. பிறகு மீண்டும் வேறுவிதமாக பிரச்னை விச்வரூப மாக கிளம்பியதும் வேறு வழியில்லாமல் பெண்ணையும், குழந்தையையும் அவள் மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு விரக்தி யுடன் திரும்பினார் கிருஷ்ணசாமியும் பட்டுமாமியும்.
ஒன்றும் புரியாத நிலையில் ராமசாமியை சந்தித்து விவரத்தை கூறினார்கள்.
பையனுக்கு செவ்வாய் தோஷம் அதனால இப்படி இருக்குமா? வேற யாராவது தூண்டி விடராலா? ஏன் இப்படி இருக்கா ரெண்டு பேரும் என்று கூறிய உடன் நம்ம சாம்பு கிட்ட சொல்லி ஜோஸ்யர் மாமாக்கிட்ட போய் கேட்டால் எல்லாம் தெளிவாயிடும் என்று கூறி அழைத்து சென்று சமாதானப்படுத்தினார்.
வாசலில் பெல் சத்தம் கேட்டதும் யாரது—– என்று குரல் கொடுத்தார் ஜோஸ்யர் மாமா.
நான் தான் சாம்பு ——- என்றார்.
வா சாம்பு உட்கார்ந்துக்கோ. என்ன ராம சாமி எப்படி இருக்கே என்று எல்லோரையும் விசாரித்து முடித்து கிருஷ்ணசாமி கொடுத்த இரண்டு ஜாதகங்களையும் வாங்கி பார்க்க ஆரம்பித்தார் ஜோஸ்யர் மாமா.
ராமசாமி—– இரண்டு பேருக்கும் எப்பொழுதும் சண்டையாம். ஆனா கொஞ்சநேரம் கழிச்சு சரியா இருக்காளாம். செவ்வாய் தோஷத்தாலா என்ன என்று தெரிஞ்சுக்கலாம்னு வந்தோம்.
ஜோஸ்யர் மாமா உடனே சிரித்துக் கொண்டு செவ்வாய் தோஷமா? இதெல்லாம் “ஒரு மாயை” என்ற உடன் ராமசாமிக்கு ஒன்றும் புரியலை.
பையன் ஜாதகம்: கும்பலக்னம் – லக்னத்திலே கேது, மீனத்தில்- செவ்வாய், ரிஷ- சுக், சூர், மிதுனத்தில் புதன், சிம்மத்தில் – ராகு, விரு- சந், தனுசுல்குரு, சனி.
பெண் ஜாதகத்தில்-: சிம்மலக்னம், லக்னத்தில் – ராகு, தனுசுல் – சூரி, புதன், குரு, சனி, மகரத்தில்- சுக், கும் – கேது, ரிஷபத்தில் – சந், மிதுனத்தில் – செவ்.
பையன் ஜாதகப்படி பொதுவா வாக்குஸ்தானமான 2 ல் செவ், இருந்தால் கடுமையான வார்த்தைகளை வெளியிடுவார். 11 ம் இடத்தில் கிரஹங்கள் வலிமையா இருந்தா தன்னோட பேச்சை மத்தவா கேட்கணும்னு நினைப்பார்.
7 ம் வீட்டு அதிபதி சூரியன் கேந்திரத்தில் சுக்கிரன் சேர்க்கை பெற்றதால் மனைவி அதிர்ஷ்டமானவளா அமைஞ்சுட்டா. சூர்யனோ வலுவான கிரஹம்.
சுக்கிரன் வீட்டில் அமர்ந்ததால் ஒரு கேந்திராதிபதி மற்றொரு கேந்திரம் வந்து அமரும் போது கோபம் சற்று அதிகமாகத்தான் வரும். ஆனா அது மேவாமல் அனுசரித்து போயிடும்.
பெண் ஜாதகப்படி 2ம் இடத்து அதிபதி புதன் 5 ல் குருவுடன் சேர்க்கை பெற்று உள்ளார். 2 ம் இடத்தை செவ்வாய் பார்க்கிறார். சிம்ம லக்னத்துக்கு செவ்வாய் யோககாரகன். அவர் 2ம் இடத்தை பார்ப்பதும் அந்த வீட்டு அதிபதி புதனை பார்ப்பதும் இந்த ஜாதகப்படியும் கடுமையாகத்தான் பேசுவா.
குரு 5ல் இருந்தாலும், சந்திரன் வலுப் பெற்றாலும் இளகிய மனது. 7 ம் இடத்து அதிபதி சனி தன் வீட்டை பார்வையிடுவதால் சண்டை முற்றி விகாரமடையாமல் சமா தானமாகவே முடியும். செவ்வாய் கிரஹமே ஒருவரை டென்சன் பண்ண வைக்கும். இரு வருக்கும் 2 ம் இடமாகிய குடும்பஸ்தானத் துக்கு செவ்வாய் தொடர்பு உடையதாக இருப்பதால் சற்று அப்படி இப்படி இருக்கத் தான் செய்யும் ராமசாமி. எல்லாம் மாயைத்தான் கவலைப்படாதே என்று கூறி மேலும் விவரித்தார் ஜோஸ்யர் மாமா.
1. ராசி கட்டத்தில் செவ்வாய் லக்னத்தி லிருந்து 2,4,7,8,12 ஆகிய ராசிகளில் இருந்தால் அது தோஷம்.
2. மேற்கண்ட செவ்வாய் லக்னத்திலேயே இருந்தாலும் தோஷம்.
3. செவ்வாய் லக்னத்திலிருப்பது மட்டுமல்லாமல் சுக்கிரன் மற்றும் சந்திரன் நின்ற ராசிகளிலிருந்து 1,2,4,7,8,12ம் ராசிகளில் இருந்தால் தோஷம்.
4. செவ்வாய், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 1,2,4,7,8,12ம் ராசிகளில் இருந்தால் அது மிக கடுமையான தோஷம்.
5. அடுத்தாற்போல் சந்திரன் நின்ற ராசியிலிருந்து எண்ணப்படுவது சற்று கடுமை குறைவானது.
6. இதை விட லக்னத்திலிருந்து எண்ணப் படும் செவ்வாய் தோஷம் குறைவான தோஷ முள்ளது.
7. குஜவத் கேது அதாவது கேதுவும் செவ்வாய் போன்றவர் எனப்படுவதால் கேதுவை செவ்வாயாக பாவித்து செவ்வாய் தோஷம் பார்க்க வேண்டும்.
மேற்கண்ட விதிகளின் படி செவ்வாய் 1,2,4,7,8, 12 ஆகிய ராசிகள் அல்லது பாவங்களில் இருந்தால் தோஷம். இவ்வாறு 1,2,4,7,8,12 என எண்ணப்படுவது லக்னம், சந்திரன், சுக்கிரன், கேது ஆகிய நான்கு நிலைகளிலும் எண்ணலாம். இந்த கணக்குப்படி பார்த்தால் 100க்கு 99 ஜாதகங்கள் செவ்வாய் தோஷமுள்ளவர் களாகத்தான் இருப்பார்கள் ராமசாமி.
விதிகளைவிட அதிக எண்ணிக்கையில் உள்ள விதிவிலக்குகளை சொல்கிறேன் கேட்டுக்கோ. செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அல்லது விதிவிலக்கு என சில கருத்துகள் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விதிவிலக்குகளின் எண்ணிக்கை செவ்வாய் தோஷம் உண்டு என்பதற்கான விதிகளின் எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது. அப்படி பார்க்கும் போது
1. செவ்வாய் தன் சொந்த வீடுகளான மேஷ விருட்சிகத்தில் இருந்தால் தோஷம் இல்லை.
2. செவ்வாய் தன் உச்ச வீடான மகரத்திலும் நீச வீடான கடகத்திலும் இருந்தால் தோஷம் இல்லை.
3. செவ்வாய் தனித்து இல்லாமல் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால் தோஷம் இல்லை.
4. செவ்வாய் மற்ற கிரகங்களால் பார்க்கப் பட்டால் தோஷம் இல்லை.
5. செவ்வாய் சர ராசிகளில் இருந்தால் தோஷம் இல்லை.
6. லக்னத்தில் குரு அல்லது சுக்கிரன் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
7. செவ்வாய் லக்னாதிபதியானால் தோஷம் இல்லை. ஏனெனில் லக்னாதிபதி கெடுக்க மாட்டார்.
8. செவ்வாய் நின்ற ராசி அதிபதி கேந்திரம் அல்லது கோணம் ஸ்தானங்களில் இருந்தால் தோஷம் இல்லை.
9. லக்னத்தில் குரு அல்லது சுக்கிரன் இருந்து செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.
10. ராசி கட்டத்தில் தோஷம் இருந்து அது நவாம்ச கட்டத்தில் மாறி இருந்தால் தோஷம் இல்லை.
11. ஜாதகரின் வாழ்வில் செவ்வாய் பால்ய பருவம் அல்லது வயோதிக பருவத்தில் செவ்வாய் தசை புக்தி, அந்தரம் வந்தாலும் தோஷம் இல்லை.
12. மேற்கண்டவாறு செவ்வாய் தோஷம் இல்லை என்ற விதிவிலக்குகள் கணக்கில் அடங்காதவை. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது செவ்வாய் தோஷம் என்பது உண்மையல்ல. அது “ஒரு மாயையே” என்பது எனது அனுபவ பாடமாகும்.