ஓதவனேஸ்வரர்கோவில், திருசோற்றுத்துறை

இது காசிக்கு அடுத்தபடியாக அட்சயபாத்திரம் கொடுத்த தலமாகும்.

இறைவன் பெயர் (சுவாமி)  : ஓதவனேஸ்வரர், சோற்றுத்துறைநாதர், தொலையாச்செல்வர்

இறைவிபெயர் (அம்பாள்): அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை

இது காசிக்கு அடுத்தபடியாக அட்சயபாத்திரம் கொடுத்த தலமாகும்.

பதிகம் திருநாவுக்கரசர் – 4 திருஞானசம்பந்தர் – 1  சுந்தரர் – 1

tct_2

கோவில்அமைப்பு: கிழக்குநோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், சுற்றிலும் மதிற்சுவருடனும் இவ்வாலயம் குடமுருட்டியாற்றின் கரையில் அமைந்துள்ளது. முகப்பு வாயலின் மேற்புறத்தில் சுதையாலான சிவனும்,பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கின்றனர். முகப்புவாயிலைக்கடந்து உள்ளே சென்றால் விசாலமான கிழக்கு வெளிப்பிரகாரம் உள்ளது. இந்த வாயிலுக்கு நேரே  உட்பிரகாரத்திற்குச் செல்லும் வாயில் உள்ளது. இந்த வாயிலுக்கு முன் பலிபீடமும், நந்திமண்டபமும் உள்ளன. கொடிமரம் இல்லை. கருவறை, மற்றும் உட்பிரகாரமும் நான்குபுறமும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. வெளிப்பிரகாரங்கள் நான்குபுறமும் விசாலமாக உள்ளன. .வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்குப்பகுதியில் தனிக்கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப்பார்த்து அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை எழுந்தருளியுள்ளாள். இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவனுக்கு “தொலையாச்செல்வர்” என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும் அம்மைக்கு “அன்னபூரணி” என்றும் திருநாமங்கள் அமைந்துள்ளது. அம்மையை உளமார உருகி வழிபட்டால்,வறுமையும் பிணியும் விலகிவிடும்.

tct1

இரண்டாவது நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தால் அடுத்துள்ள பெரிய மண்டபத்தில் வலதுபுறம் நடராஜசபை உள்ளது. இந்த மண்டபப்பகுதியிலிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குள் நுழைந்து விடலாம். தெற்காக கிழக்குப்பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து, அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது. இத்தலத்திற்குச் சிறப்பு தரும் மூர்த்தியான இவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார்.

அடுத்து இருபுறமும் கௌதமர் சிலையும் அவர் வழிபட்ட ஐதிகக்காட்சி செதுக்கப்பட்ட சிலையும் உள்ளது.

tct3அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகா மண்டபமும்,அர்த்தமண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு “சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச்செல்வர்” கிழக்கு நோக்கி லிங்க உருவில் அருட்காட்சி தருகிறார். தெற்கு வெளிப்பிரகாரத்தில் இருத்தும் இறைவன் கருவறை பகுதிக்குச் செல்ல வழி உள்ளது.

தலச்சிறப்பு: இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணிதீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளை தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பிணி தீர வீடு பேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சயபாத்திரம் கொடுத்த தலமாகும்.

சிறந்த சிவபக்தரான அருளாளருக்காக அட்சயபாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலம் சப்தஸ்நானதலங்களில் ஒன்றாகும்.

அடியவர்களது பசிப்பிணியை போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு “திருச்சோற்றுத்துறை” எனும் பெயர் ஏற்பட்டது. பிரம்மா,விஷ்ணு,இந்திரன்,கவுதமமுனிவர், சூரியன் ஆகியோர் வழிபட்டுள்ள சிறப்பைப் பெற்றது இத்தலம். இறைவன் சந்நிதிக்கு வலது புறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ள தலங்கள் “திருமணத்தலங்கள்” என்றுஅழைக்கப்படும். அவ்வகையில் இத்தலத்திலும் அம்பாள் அன்னபூரணியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளதால் திருச்சோற்றுத்துறை ஒரு திருமணத்தலமாக கருதப்படுகிறது.

சப்தஸ்தானத்தலம்: திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்தஸ்தானத்தலங்களில் இத்தலம் மூன்றாவது தலமாகும்.

 tct4

தலவரலாறு: ஒருமுறை திருச்சோற்றுத்துறை இருந்த நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கிள் பசியால் வாடினர். இத்தலத்தில் வசித்து வந்த அருளாளர் என்ற சிவபக்தரும் பஞ்சகாலத்தில்பசியால் அவதிப்பட்டார். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், “இப்படி மக்களை பசியில் தவிக்கவிடுவது நியாயமா” என்றுமுறையிட்டார். திடீரென்று மழைபொழிய ஊரே வெள்ளக்காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்துவந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் “அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரம். இதைவைத்து அனைவருக்கும் சோறுபோடு”‘ என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள்செய்தார். இந்தபாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும், நெய்யும் ,குழம்புமாக போட்டு அவர்களின் பசிதீர்த்தார். இவ்வாறு இறைவன் அருளால் மக்களின் பசியைப்போக்கிய அருளாளருக்கும் அவர்மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்தமண்டபத்திற்கு வெளியேசிலை உள்ளது.

எப்படிப்போவது: தஞ்சாவூரில்இருந்து 13 கி.மி. தொலைவிலும், திருக்கண்டியூரில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப்பேருந்து வசதி உண்டு

ஆலயமுகவரி: அருள்மிகு ஓதவனேஸ்வரர்திருக்கோயில் திருச்சோற்றுத்துறை
திருச்சோற்றுத்துறை அஞ்சல், (வழி) கண்டியூர், திருவையாறுவட்டம்
தஞ்சைமாவட்டம் PIN – 613202

நடைதிறப்பு: இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணிமுதல் பகல் 12 மணிவரையிலும், மாலை 4-30 மணிமுதல்இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலயதொடர்புக்கு: திரு.மனோகரன்/திரு.கண்ணன்: கைபேசி: 9943884377.

அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

astrologer_thetiyur_mahadevDivine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
Swayamvaralaya,
vedicpoojahomam.com
98417 89483, 8825609304