ஒரு சத்திய புருஷனின் சான்னித்யம்

kvkaraiகண்ணப்ப ஸ்வாமிகள் கேரள பூமி, கண்ணனூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது.  இவருடைய தாய் எரமத்து என்னும் கிராமத்தையும் தந்தை செனியஞ்சால் என்ற கிராமத்தையும் சேர்ந்தவர்கள்.  இந்தக் கூற்றை மெய்ப்பிப்பது மாதிரி பின்னாளில் காவாங்கரையில் தான் தங்கி இருந்த குடிசையின் முகப்பில், எரமத்த செனியஞ்சாலு பிறந்தது மௌனகுரு கண்ணப்ப ஸ்வாமிகள் என்று எழுதி வைத்திருந்தாரம்.

ஷீர்டி பாபாவுக்கும் கண்ணப்ப ஸ்வாமிகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.  இருவருமே எப்போது பிறந்தார்கள் என்கிற விவரம் தெரியாது.  புகைக்கும் வழக்கம் இருவருக்குமே இருந்தது.  இருவருடைய ஆரம்ப நாட்களும் குடிசையில்தான் கழிந்தன.  பாபா வசித்த இடத்தின் அருகே ஒரு வேப்பமரம் இருந்துபோல கண்ணப்ப ஸ்வாமிகள் வசித்த வீட்டின் அருகேயும் ஒரு வேப்பமரம் இருந்தது. இருவருமே சட்டி போன்ற ஒரு பாத்திரத்தைக் கையில் வைத்து பிட்சை எடுத்துதான் உண்டு வந்தனர்.  இதையே பிறருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

ஒரு கட்டத்தில் சென்னை திரும்பிய அவர் செங்குன்றம் பகுதிக்கு வந்தார். 1948ம் வருடம், காவாங்கரையில் ஓரிடத்தில் அமர்ந்திருந்தார் கண்ணப்ப ஸ்வாமிகள்.  அப்போது அவருடன் கோவிந்தராவ் ஸ்வாமிகள் (இவர் தற்போது இல்லை, கண்ணப்ப ஸ்வாமிகளின் நினைவாலயத்தில் இருவருக்கும் சமாதி இருக்கிறது) நாகப்ப ரெட்டியார் போன்ற வேறு சில அன்பர்களும் இருந்தனர்.

உள்ளூர் விவசாயிகள் ஸ்வாமிகளின் குடிசையைக் கடந்தபோது ஆசி வாங்குவதற்காக உள்ளே நுழைந்தனர். உள்ளே கண்ட காட்சி அவர்களை உறையை வைத்தது.  அந்த நேரத்தில் அகண்ட யோகத்தில் இருந்தார் ஸ்வாமிகள்.  கை கால், தலை, உடல் என்று அனைத்து உறுப்புகளும் தனித்தனியாக இருப்பதைப் பார்த்த விவசாயிகள் கலப்பையை அப்படியே போட்டுவிட்டு நம்ம சாமியை யாரோ கொன்னு போட்டுட்டாங்க என்று ஊருக்குள் தகவல் பரப்பினர். சற்று நேரம் கழித்து தன் அகண்ட யோகத்தை முடித்து கண்ணப்ப ஸ்வாமிகள் குடிசையை விட்டு வெளியே வந்தார்.  தன் குடிசை முன் ஏராளமானோர் திரண்டு நிற்பது ஏன் என்று கேட்டார். சற்று முன் அவரை அக்கு வேறு ஆணி வேறாகப் பார்த்த விவாசயிகள்  முழு உடலுடன் பார்த்தபோது குழம்பிப் போனார்கள்.  அதன்பிறகே ஸ்வாமிகள் அவர்களிடம் அகண்ட யோகம் பற்றிச் சொல்லித் தெளிய வைத்தார்.

சபரிமலைக்குச் செல்லும் வழக்கம் உள்ள பக்தர்கள், காவாங்கரை கண்ணப்ப ஸ்வாமிகள் பற்றி ஓரளவு அறிந்திருப்பார்கள்.  பெரும்பாலான சென்னை பக்தர்கள் காவாங்கரை ஸ்ரீ கண்ணப்ப ஸ்வாமிகளின் அடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.  சென்னையில் இருந்து பயணிக்கும்போது செங்குன்றத்துக்கு முன்னால் வரும் புழல் அருகே இருக்கிறது காவாங்கரை எனும் சிறு கிராமம்.
இந்தத் திருக்கூட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சைட்பேக் எனப்படும் ஜோல்னா பையைத் தங்களது தோளில் மாட்டிக் கொண்டு செல்வர்கள்.  அதில் காவாங்கரை ஸ்ரீ கண்ணப்ப ஸ்வாமிகள் திருவுருவப் படம் ஒரு பக்கம் இருக்கும்  இன்னொரு பக்கம் இவர்களது அடியார் திருக்கூடத்தின் பெயர் இருக்கும்.  பொதுவாக இத்தகைய பக்தர்களை மற்றவர்கள் கண்ணப்பா குரூப் என்றே சொல்வார்கள்.

மௌனகுரு பகவான், சட்டிசாமி, சட்டிப்பரதேசி என்றெல்லாம் கண்ணப்ப ஸ்வாமிகளை அன்புடன் அழைத்து வருகிறார்கள்.

மகான்களின் சிலர், மனிதர்களை விட்டு விலகியே இருப்பார்கள். அந்த மகான்களின் செயல்பாடுகள் அனைத்தும் உலகத்தில் உள்ள சாதாரண மக்களின் தேவைகளையும் அவர்களது நலன்களையுமே சுற்றி இருக்கும்.

மகான்களை முழுவதுமாக நம்பி சரண் அடைந்தால் எண்ணியது கைகூடும்.  இது எவருக்கும் விதிவிலக்கல்ல. இவர்கள் சொல்வது நமக்கு அதன் தன்மையை அதிகப்படுத்துவதாக இருக்கும் ஆனால் உண்மையில் அது அப்படி அல்ல.  ஏன் நமக்கு இப்படி ஒரு தீர்வு சொல்லி இருக்கிறார்?  என்று ஆராய முற்படக்கூடாது. ஒரு குருவுக்கு தெரியாதா தன் சீடனின் கவலை?

கண்ணப்ப ஸ்வாமிகளின் பக்தர் ஒருவரால் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஒரு வருடம் சபரிமலைக்குச் செல்ல முடியவில்லை.  அந்த பக்தருக்கு வருத்தம்.  சபரிமலையில் மகரஜோதி தென்படும் நாளன்று அந்த பக்தர், காவாங்கரைக்கு வந்தார். பக்தனின் குறையை அறிந்தார் ஸ்வாமிகள்.  அப்போது மாலை நேரம் சூரியனும் மறைய ஆரம்பித்தார்.

என்னப்பா, சபரிமலைக்குப் போய் ஜோதி பார்க்க முடியலேன்னு வருத்தமா? என்று கேட்டார். ஆமா சாமீ. வா என் பின்னால் என்ற ஸ்வாமிகள் விறுவிறுவென்று அருகில் இருக்கும் ஏரிக்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.  பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை.  எனினும் ஸ்வாமிகளைப் பின்தொடர்ந்தார். ஒரு மேடான இடத்தை அவர்கள் அடைந்தனர். பக்தனை அருகே அழைத்த ஸ்வாமிகள் மேலே ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி அங்கே பார் நீ காண விரும்பிய காந்தமலை ஜோதி. நன்றாகத் தரிசித்துக்கொள் என்றார்.  ஸ்வாமிகள் காட்டிய திசையைக் கவனித்த பக்தர் விதிர்விதிர்த்துப் போய்விட்டார். சபரிமலையில் இருந்தால் எப்படி ஜோதியைத் தரிசிக்க முடியுமோ, அதுபோல் காவாங்கரையில் இருந்தபடியே அந்த அற்புதக் காட்சியைத் தரிசித்தார் பக்தர். கண்ணப்ப ஸ்வாமிகளுக்கும் ஐயப்பனுக்கும் எப்படி ஒரு தொடர்பு ஏற்ப்பட்டது.

காவல்துறையில் பணிபுரிந்த ஒருஅன்பர் கடும் எலும்புருக்கி நோயால் அவஸ்தைப்பட்டார்.  நான்கு விலா எலும்புகளை எடுத்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர் திர்மானமாகசொல்லிவிட்டார்கள்.   உடல்நோய் காரணமாக பணியில் இருந்து அவரை விலக்கி விட்டார்கள்.  இனியும் தான் பிழைப்போம் என்கிற நம்பிக்கை இழந்த நிலையில் அன்பர் கண்ணப்ப ஸ்வாமிகள் பற்றி யாரோ சிலர் அவரிடம் சொன்னார்கள்.  அவநம்பிக்கையுடன் ஸ்வாமிகளிடம் வந்தார் அன்பர்.  கவலையுடன் காணப்பட்டவரை அருகே அழைத்து ஒரு பாக்கெட் சிகரெட்டைக் கொடுத்துப் புகைக்கச் சொன்னார். பதறிப்போய்விட்டார் அந்த அன்பர் ஐயையோ, எலும்புருக்கி நோயால் தவிக்கும் எனக்கு சிகரெட்டைக் கொடுத்து ஏன் புகைக்கச் சொல்கிறீர்கள்? ஏற்கனவே இருக்கும் நோயை அதிகப்படுத்தாதா? ஆபத்தை வலியச் சென்று தேடுவதாக அல்லவா உங்கள் செயல் இருக்கிறது? என்று ஸ்வாமிகளிடமே கேட்டார். புன்னகைத்த ஸ்வாமிகள், இதைப் பிடி அன்பனே, உனது நோய் எல்லாவற்றையும் இது போக்கிவிடும் என்று பதில் சொல்லி இருக்கிறார்.

3மாதங்கள் ஓடின. வழக்கம்போல் ஒரு நாள் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றார் அந்த அன்பர்.  அவரை முழுவதும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், உங்கள் உடலில் வியாதி இருந்தற்கான அடையாளமே இல்லை.  நீங்கள் பூரணமாக நலம் பெற்றுவிட்டீர்கள்.  ஏதோ ஒரு சக்திதான் உங்களை இந்த அளவுக்கு குணமாக்கி இருக்கிறது என்று கூறி, சந்தோஷத்துடன் அனுப்பி வைத்தனர். இந்த அன்பர் ஓர் உதாரணம்தான்.  இப்படி எத்தனையோ பேரைப் பல வியாதிகளில் இருந்து காப்பாற்றி வாழ வைத்திருக்கிறார்.

கண்ணப்ப ஸ்வாமிகளின் பக்தர்களது இல்லத்து முகப்பில் இவர் புகைப்படத்தை காணலாம்.  இந்தப் புகைப்படத்தின் பின்னணியில் ஒரு குடிசை வீடும், நாயும் தென்படும்.  என் பக்தர்களின் வீட்டில் ஒரு கூர்க்காவாக இருந்து அவர்களை என்றென்றும் காப்பேன் என்றே கண்ணப்ப ஸ்வாமிகள் சொல்லி இருக்கிறாராம்.

9.10,1961 பிலவ வருடம் புரட்டாசி மாதம் 23 ஆம் தேதி மகளாய அமாவாசை ஹஸ்த நட்சத்திர தினத்தில் கண்ணப்ப ஸ்வாமிகள் முக்தி அடைந்தார். தற்போது இந்த நாளில் கண்ணப்ப ஸ்வாமிகளின் குருபூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. புழல் சிறைச்சாலையின் அருகே ஒரு வளைவின் உள்ளே சென்றால் இவருடைய சமாதியையும் திருக்கோயிலையும் அடையலாம்.  ஒரு சிறு சாலையின் ஒரு பக்கம் திருக்கோயிலும் மறுபக்கம் சமாதியும் அமைந்துள்ளள.  சமாதி அடைவதற்கு முன் தனக்கான இடத்தைத் தேடினாராம் கண்ணப்ப ஸ்வாமிகள் அருகில் உள்ள ஓர் இடத்தைத் தேர்வு செய்தார்.  அந்த இடம் ராஜா அண்ணாமலைச் சொட்டியாருக்குச் சொந்தமானது. அந்த இடத்திலேயே சமாதி அமைந்துள்ளது.
திருக்கோயிலுக்குள் நுழைந்தால் தெய்வத் திருவுருவங்களின் நிறைவான தரிசம்.  சமாதிக்குள் அந்த சத்திய புருஷனின் சான்னித்யம். திருக்கோயிலுக்குள் சுதை. சிலா (கல்) மார்பிள் வடிவங்களில் கண்ணப்ப ஸ்வாமிகள் அருள் புரிகிறார்.  தவிர விழாக் காலங்களில் உலா வருவதற்கு இவருக்கு இங்கே பஞ்சலோக விக்கிரகமும் இருக்கிறது.  இந்தத் திருக்கோயிலை உருவாக்கியதில் கோவிந்தராவ் ஸ்வாமிகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.  மூலவர் விக்கிரகம் கிழக்கு நோக்கியும் உற்சவர் விக்கிரகம் வடக்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன, தவிர விநாயகர், ஆதிசங்கரர், முருகப் பெருமான், ஐயப்பன், ஆஞ்சநேயர் முதலான தெய்வங்களுக்கும் சந்நிதி உண்டு. பௌர்ணமி, அமாவசை (இரு தினங்களில் இரவில் வழிபாடு) பிரதோஷம் (மாலை வேளை) ஜனவரி முதல் தேதி, தமிழ்புத்தாண்டு தினம் (சித்திரை 1) கண்ணப்ப ஸ்வாமிகளின் குருபூஜை தினம் புரட்டாசி ஹஸ்த நட்சத்திரம்) ஆகிய நாட்களில் இங்கே விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. சென்னை அருகே காவாங்கரையில் உறையும் கண்ணப்ப ஸ்வாமிகளின் தூய வாழ்க்கையைப் போற்றி, அவருடைய சந்நிதியை தரிசனம் செய்து அருள் பெறுவோம்.

நடைதிறந்திருக்கும் நேரம்:

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6மணி முதல் பகல்12 மணி வரையிலும், மாலை 5மணி முதல் இரவு 8மணி வரையிலும் திறந்திருக்கும்.

அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று கண்ணப்ப ஸ்வாமிகளின் அருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

வனஜா மகாதேவன்